திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். அதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கன்டோன்மெண்ட் பகுதிகளில் பாதாள கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், கன்டோன்மெண்ட் பகுதிகளில் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் நேற்று வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்த இயந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித்துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும்.