ஈரோடு, அக். 7: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, அயோத்தியாபுரிபட்டினத்தை சேர்ந்தவர் ராம்குமார் (28). இவரது சகோதரி சீதாலட்சுமி, கணவர் சமுத்திர பாண்டியனுடன் சேர்ந்து தற்போது பெருந்துறையில் மிக்சர் கடை வைத்துள்ளார். கடந்த 4ம் தேதி இரவு சினிமாவுக்கு சென்ற சீதாலட்சுமி, ராம்குமார் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும், டிக்கெட் கிடைக்காததால் மீண்டும் வீடு திரும்பினர். வீட்டில் ராம்குமாரின் தந்தை ராமலிங்கம் தூங்கிக் கொண்டிருந்தார்.
சீதாலட்சுமியும், ராம்குமாரும் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால், பக்கத்தில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் முதல் தளத்துக்கு சென்று அங்கிருந்து அவர்களது வீட்டுக்குள் சென்று கதவை திறந்து கொள்ளலாம் என்று ராம்குமார் புதிய வீட்டின் முதல் தளத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த செங்கல் தூணை பிடித்து ராம்குமார் தங்களது வீட்டுக்குள் இறங்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக செங்கல் தூண் இடிந்து விழுந்தது.
செங்கல் தூண் குவியலுக்குள் ராம்குமார் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராம்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.