காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் அவ்வப்போது குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி நேற்று புரிசை கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 63 கேவிஏ திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்துகொண்டு மின்மாற்றியை இயக்கிவைத்தார்.
பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைத்ததால் எம்எல்ஏவுக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, காஞ்சிபுரம் வடக்கு செயற் பொறியாளர் பிரசாத், உதவி செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் வடக்கு பள்ளூர் சர்மிளா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், மின்சார துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.