புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் மின்சாரம் இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றதால் அதில் பங்கேற்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர்துறை அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி தொழில்துறை மற்றும் தமிழ்நாடு பகுதியில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்றனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாம் நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென்று மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகும் மின் விநியோகம் இல்லாததால் விளக்கு வெளிச்சத்தில் நேர்காணல் நடைபெற்றது. 3 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு நீடித்த நிலையில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.