அமராவதி: விஜயவாடா அருகே மதுபாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த நிலையில் மதுபாட்டில்களை மக்கள் எடுத்து செல்லாமல் இருக்க போலீசார் லாரிக்கு காவல் இருந்தனர். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் இருந்து ஜக்கையாபேட்டை நோக்கி நேற்று அரசு மதுபானம் ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. கீசரா என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த மதுபான பாட்டில்கள் சாலையில் உருண்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மதுபானங்களை அள்ளிச்செல்ல போட்டி போட்டனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதி மக்கள் எடுத்துச்செல்ல முயன்ற மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் கவிழ்ந்த லாரியில் இருந்து மதுபாட்டில்களை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.