ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 55.68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வீராங்கனை வித்யா அசத்தினார்.
ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டிற்கான 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரின் 11வது நாளான இன்று 400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 55.68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வீராங்கனை வித்யா அசத்தினார்.
இதன் மூலம் பெண்களுக்கான 400மீ தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் மற்றொரு பதக்கம் கிடைத்தது. இதுவரை ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 24 வெள்ளி, 26 வெண்கலம் என 63 பதக்கங்களை அள்ளியுள்ளது.
மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஒட்டப்பந்தயத்தில் 55.42 வினாடிகளில் எல்லைக் கோட்டை கடந்து கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிடி உஷா 55.42 வினாடிகளில் தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அதனை இப்போது 39 ஆண்டுகளுக்குப் பிறகு வித்யா இப்போது சமன் செய்துள்ளார்.