லக்னோ: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலின் மாதிரி அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. சுதந்திரத்தின் போது, ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியால் ஆன செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அலகாபாத் அருங்காட்சியகத்தில் செங்கோல் வைக்கப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே 28ல் திறந்து வைத்தார்.திறப்பு விழாவின் போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே நிறுவப்பட்டது. அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் எடுத்து செல்லப்பட்ட நிலையில் செங்கோலின் மாதிரி தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதை உபி ஆளுனர் ஆனந்திபென் படேல் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அலகாபாத் அருங்காட்சியக இயக்குனர் ராஜேஷ் பிரசாத் கூறுகையில்,‘‘இதில், அளவு மற்றும் எடை, எல்லாம் ஒன்றுதான். ஒரு வாரத்தில் இது தயாரிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதனை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர். அசல் செங்கோல் இங்கிருந்து மாற்றப்படும் போது தான் பலருக்கு இது பற்றி தெரியவந்தது.அதன் மாதிரியை வைத்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது’’ என்றார்.