நெல்லை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் ஏழை மக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 6 ஆயிரத்து 425 பேருக்கு 7.57 கோடி மானியம் உட்பட ரூ.156 கோடி கடன்களை வழங்கி பேசியதாவது:
நாட்டின் உற்பத்தி, பொருளாதாரத்தின் அடிப்படையில் ஜிடிபி என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. எனினும் கடன் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது. அரசு பல்வேறு திட்டங்களை தீட்டுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மூலதன செலவுகளுக்கு எவ்வளவு செலவிடுகிறோம் என்பது முக்கியமாகும். இந்த நீடித்த வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் என கடன் தேவைப்படுவோருக்கு வங்கிகளின் கரங்கள் நீள வேண்டும். அந்த கடன் உதவிகள் மூலம் சமுதாயம் ஏற்றம் பெறும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடப்பு ஆண்டில் ரூ.7 லட்சம் கோடிக்கு கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளார். தமிழ்நாட்டின் மொத்த பட்ஜெட் ரூ.3.5 லட்சம் கோடி என்றாலும், ரூ.7 லட்சம் கோடிக்கு கடன் வழங்கும் போது பொருளாதாரம் ஏற்றம் பெறும். மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பொதுமக்களும் என்ன நோக்கத்திற்காக கடன் பெறுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்து குறித்த காலத்தில் தங்களின் பங்களிப்பை திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.