ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களுக்கு அடியில் புதிய புற்கள் பாதிக்கும் பணிகளை ஊழியர்கள் துவக்கினர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். தற்போது இரண்டாம் சீசன் துவங்கிய உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளிலும் பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது.
அங்கு உள்ள மரங்களின் அடியில் பூற்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், அவைகளை அகற்றி விட்டு புதிய புற்கள் நடவு செய்யும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாள்தோறும் புல் மைதானங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி சமன் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் மலர் அலங்காரங்களை காணவும், புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.