பேரையூர், செப். 29: பேரையூர்அருகேயுள்ளது வாழவந்தாள்புரம். இந்த ஊரில் வாழவந்த அம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவில் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கவுறு குத்தி நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (27) தரப்பினர் ஊர்வலமாக வந்தபோது பட்டாசு வெடித்துள்ளனர். இதனை இதே ஊரைச் சேர்ந்த நல்லமுத்து(56) மற்றும் கரந்தமலை (60) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் நல்லமுத்து, கரந்தமலை ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர்.
மேலும், இதில் ஏற்பட்ட அடிதடி தகராறில் இதே ஊரைச் சேர்ந்த குண்டுபாண்டி, விக்னேஷ், ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் கத்தி குத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நல்லமுத்து, கரந்தமலை, ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையிலும், குண்டுப்பாண்டி, விக்னேஷ் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாகையாபுரம் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கண்ணன், இவரது மனைவி சீதாலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.