பாட்னா: இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தை நேற்று சந்தித்து பேசினார். பீகார் மாநிலம், பெகுசராயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரணி மாநாடு நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா நேற்று பீகார் சென்றார். அப்போது பாட்னாவில் உள்ள லாலு பிரசாத்தின் வீட்டுக்கு சென்று லாலுவையும் அவரது மனைவி ராப்ரி தேவியையும் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவருடன் ஆலோசனை நடத்தினேன். பாஜ ஆட்சியில் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டின் மதசார்பின்மை மற்றும் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதற்காக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியால் வரும் மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்படும் என பாஜ பயந்துள்ளது. தேர்தல் நெருங்கும் போது மேலும் கட்சிகள் கூட்டணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.