புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ அரசு இல்லமாக சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களா பங்களா புதுப்பிக்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிஐ தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இதுபற்றி யெ்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: சிபிஐயின் முதற்கட்ட விசாரணையை வரவேற்கிறேன். இதுபோன்று என் மீது பாஜ வழக்கு போடுவது இது முதல் முறையல்ல. பிரதமர் பதற்றமாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
பிரதமர் முன் நான் குனிய வேண்டும் என்று விரும்புகிறார். அவர் என்னை அழிக்க விரும்புகிறார். ஆனால் அவர் எவ்வளவு போலியான விசாரணை நடத்தினாலும் அல்லது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் அவர் முன் தலை குனியப் போவதில்லை. நான் உடைந்துபோக மாட்டேன். எனவே, நான் அவருக்கு சவால் விடுகிறேன். முந்தைய அனைத்து விசாரணைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை என்பது போல, இந்த விசாரணையிலும் எதுவும் கிடைக்காது. எனவே, குற்றச்சாட்டில் உண்மை இல்லையென நிரூபிக்கப்பட்டால், மோடி பதவி விலகுவாரா? இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.