சென்னை, செப்.28: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் உடல் நலக்குறைவால் சமீபத்தில் இறந்த திமுக கவுன்சிலர் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, அனைத்து கவுன்சிலர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு திமுக உறுப்பினர் சரஸ்வதியின் மறைவுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மேயர் ஆகியோர் பேசினர்.
இரங்கல் தீர்மானத்தின் மீது மேயர் பிரியா பேசுகையில், ‘‘மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியுடன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார். இந்நிலையில் மீண்டும் மாமன்ற கூட்டம் 29ம் தேதி நடைபெறும் என்று மேயர் பிரியா அறிவித்து கூட்டத்தை ஒத்தி வைத்தார். மறைந்த திமுக உறுப்பினர் சரஸ்வதி சமீபத்தில் தான் உடல் நலக்குறைவால் இறந்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், ஏற்கனவே 3 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த 3 கவுன்சிலர்களில் இரண்டு பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். மேலும் ஒருவர் காங்கிரஸ் கவுன்சிலர். தற்போது, சரஸ்வதியின் இறப்பை அடுத்து சென்னையில் கவுன்சிலர் இல்லாத வார்டுகளின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.