மும்பை: வேலை ெவட்டி இல்லாத சிலர் என் தாய், தந்தையை ட்ரோல் செய்வதை கைவிட வேண்டும் என்று நடிகை ரஷாமி தேசாய் வீடியோ வெளியிட்டு கண்டித்துள்ளார். பாலிவுட் நடிகை ரஷாமி தேசாய் வெளியிட்ட வீடியோவில், ‘வேலை வெட்டியின்றி இருப்பவர்களே… சமூக வலைதளங்களின் மூலம் எனது வாழ்க்கையைப் பற்றி ஏதாவது பதிவிட்டுக் கொண்டே உள்ளனர். இதுபோன்ற செயல்கள் எனக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஒருவர் என் தாயை பறகறி தவறாக பதிவிட்டார். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்று அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். சுயமாக முன்னேறி வருகிறேன்.
சொந்தமாக முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவளாக இருக்கிறேன். என் மீதான அக்கறையில் பதிவிட்டால் ஏற்கிறேன். ஆனால் அதே அக்கறை என்னை சில நேரங்களில் அவமதிப்பது போல் உள்ளது. எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘ட்ரோலிங்’ என்ற பெயரில் எனது குடும்பத்தையும், எனது பெற்றோரையும் இழுத்து போட்டு அவமதிப்பு செய்யாதீர்கள். மிகவும் கீழ்த்தரமாகவும், சுயநலமாகவும் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.