கடலூர்: கடலூரில் மின்கம்பங்களை அகற்றாமல் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தவெளி ரோடு மற்றும் வண்டிப்பாளையம் இணைப்பு சாலைப்பகுதிகளில் ரூ.2 கொடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் பல இடங்களில் மின்கம்பங்களை கால்வாய்களுக்குள் அப்படியே வைத்து கான்க்ரீட் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் ஒப்பந்ததாரர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை காலங்களில் சிறு குப்பைக்கே மழைநீர் பாய்ந்தோடுவதில் சிக்கல் ஏற்படும் என்கிற நிலையில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியத்தால் மின் கம்பங்களும் அதற்கு தடையாக இருக்கும் என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.