நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.60 ஆயிரம், அரசின் நிதி ரூ.1.20 லட்சம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு வாங்கப்பட்டது. இதை மாணவர்கள் பயன்பாட்டிற்காக பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொருத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்று மகிழ்ந்தனர்.
நவீன கட்டமைப்பு வசதிகளோடு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகள் மேம்பாடு அடைந்து வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் கல்விதரம் உயர்வதை கண்கூட காண முடிகிறது என பெற்றோர் பெருமிதம் தெரிவித்தனர். விழாவில், தலைமை ஆசிரியர் வேல்நெடுங்கண்ணி, ஊராட்சி தலைவர் கமலா, வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.