சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2023-24ம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகள் கால அளவுள்ள பட்டயப்படிப்புகளான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள நபர்கள் இந்த படிப்புகளுக்கான விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை வருகிற 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி மாலை 5 மணிவரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்கள் ஆணையர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது பள்ளிகளிலோ வழங்கப்படமாட்டாது. விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம் ரூ.350.இக்கட்டணத்தை SBI Collect எனும் இணையதள சேவை வாயிலாக செலுத்தி அதற்குரிய பணப்பரிமாற்ற குறியீட்டு எண்ணிணை அதற்குரிய அசல் ரசீதினையும் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிப்பதன் மூலமாக உரிய விண்ணப்பக் கட்டணத்தினை செலுத்தியதாக கருதப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம், பட்டியல் இனம் (அருந்ததியினர்), பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்திற்கான தொகை ரூ.350/-ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி அடுத்த மாதம் 4ம் தேதி மாலை 5 மணி வரை ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப்படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து ” செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை ஆணையரகம்,அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106” என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் தபால் அல்லது கூரியர் சேவையின் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.