புழல்: மாதவரம் மண்டலத்தில், மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் மண்டலம் புழல் காந்தி பிரதான சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சள்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுகின்ற வகையில் நேற்று பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கி மஞ்சப்பை குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்து அனைவருக்கும் மஞ்சள்பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், பொது சுகாதார குழு தலைவர் சாந்தகுமாரி, மண்டல குழு தலைவர் நந்தகோபால், 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ், திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் மகேசன், மாதாவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவக்குமார், 23வது வார்டு உதவி பொறியாளர் அருண் மற்றும் மாதவரம் மண்டல, மாநகராட்சி அதிகாரிகள், திமுக வட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.