சென்னை: சட்டமேதை அம்பேத்கரை குறித்து அவதூறாக பேசியதாக ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைதுக்கு செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஸ்வ இந்து அமைப்பின் முன்னாள் மாநில தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் சனாதனத்தை ஆதரித்து பேசினார்.
அப்படி பேசும் போது அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது மேலும் மதம் மற்றும் சாதி ரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் இழிவாக பேசிய அவரை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தியாகராய நகர் ராஜம்மாள் தெருவில் உள்ள இல்லத்தில் வைத்து ஆர்.பி.வி.எஸ். மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இருதரப்பினரினையே பகைமையை உருவாக்குதல் போன்ற 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.