செங்கல்பட்டு: மறைமலைநகர் பேருந்து நிறுத்தம் அருகே, பயன்பாடின்றி கிடக்கும் கழிவறையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் ஆண்கள், பெண்களுக்கான கழிவறை அமைக்கப் பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டப்பட்ட இருபாலாருக்கான கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக பயணிகளுக்கு பயன்படும் வகையில் இந்த கழிவறைக்கு தேவைப்படும் வகையில் நீர்த்தேக்க தொட்டி, தண்ணீர் குழாய்கள் என அனைத்து வசதிகளும் கட்டப்பட்டது.
ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், அதிகமான பயணிகள், பொதுமக்கள் அந்த கழிவறை அருகிலேயே சிறுநீர் கழித்துவருவதால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை கொண்டு காத்து கிடக்கவேண்டிய நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.