கருங்கல், செப்.8: கருங்கல் அருகே கணவரின் கல்லறைக்கு மாலை அணிவிக்க சென்ற இளம் ெபண்ணை தாக்கிய மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருங்கல் அருகே நட்டாலம் பகுதியை அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்தவர் பிரிஷா (28). அவரது கணவர் அஷ்வின். கடந்த வருடம் இறந்துவிட்டார். அஷ்வினுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக பிரிஷா கருங்கல் அடுத்த இலவுவிளைக்கு சென்றுள்ளார்.
கணவருடைய கல்லறைக்கு மாலை அணிவித்து கொண்டிருந்தார். அங்கு அஷ்வினுடைய தந்தை சுந்தர்ராஜ் (63) வந்துள்ளார். அப்போது பிரிஷாவின் மாமனாரான சுந்தர்ராஜ், மருமகள் என்றும் பாராமல் பிரிஷாவை அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. மேலும் கையால் தாக்கி, அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரிஷா, கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சுந்தர்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.