கருங்கல்,செப்.8: தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிப்புத்தன்துறை கிராம மக்கள் தங்களது பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து கிராம மக்கள் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே விஜய் வசந்த் எம்.பி. தனது உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹10 லட்சமும், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ₹7.50 லட்சமும் ஒதுக்கீடு செய்தனர். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ₹ 31,09,500 என்று மொத்தம் ₹48,59,500 நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
தற்போது பாலம் அமைக்கும் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி, ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், தூத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லைலா, இரவிப்புத்தன்துறை பங்கு தந்தை ரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.