பாடாலூர்,செப்.5: ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், மதுரைவீரன், கவுசக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
மாலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், பூஜைகளோடு முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், யந்திரம் வைத்தல் நிகழ்ச்சி
நடைபெற்றது. பின்னர் கணபதிஹோமம், திரவியஹோமம், நாடி சந்தனம், யாத்ரா தானம் பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் சிறுவயலூர், நக்கசேலம், குரூர், புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, புது அம்மாபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.