ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் குடும்ப பிரச்சனை காரணமாக பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்றில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்பட்ட கணவர் வீட்டார், அந்த பெண்ணை கடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் உத்தரவின் பேரில், உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த உறவினர் மற்றும் கணவர் ஆகியோரின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை விரட்டிச் சென்று கைது செய்தனர். அப்போது காயம் அடைந்த 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாகரீக சமூகத்தில் இது போன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை என கண்டனம் தெரிவித்துள்ள அசோக் கெஹ்லாட், அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தெரிவித்தார்.