லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் வீட்டில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள மோகன்லால்கன்ஜ் மக்களவை தொகுதி எம்.பி. கவுஷால் கிஷோர். இவர் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை இணையமைச்சராக உள்ளார்.
இவரது மகன் விகாஷ் கிஷோரின் வீட்டில் அவரது நண்பரான வினய் ஸ்ரீவஸ்தவா என்ற 30 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அமைச்சரின் மகன் வீட்டில் இக்கொலை சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்ததாக தெரிய வந்துள்ளது. வீட்டில் வேலை பார்த்து வருபவர்களுடன் சேர்ந்து வினய் ஸ்ரீவஸ்தவா இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர், இரவு முழுவதும் அவர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.