தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 50 தார்சாலை அமைக்கும் பணிகளை இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மழைக்காலத்திற்கு முன்பு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலைகள் அமைக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதில் தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம் 22, 23, 25, 35 ஆகிய 4 வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 7.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 50 சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, ரூ.2.50 கோடியில் தார் சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து, சாலை பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அப்போது மில்லிங் செய்து சாலைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பகுதி செயலாளர் கருணாகரன், ரமேஷ், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.