சென்னை: குறுவை பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் போதாது. ஒன்றாம் தேதி வரை காத்திருக்காமல் கூடுதல் நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திற்கு திறந்து விட காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆணையிட்ட நீரின் அளவும், கர்நாடகம் திறந்து விடுவதாக கூறிய நீரின் அளவும் காவிரி பாசன மாவட்டங்களில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்கு போதுமானது அல்ல.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வினாடிக்கு 24,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதிகள், காணொலி மூலமாக அல்லாமல் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். காவிரி வழக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.