சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் ரூ.12 கோடியே 66 லட்சம் மதிப்பிலான நவீன 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேன், குடல் இரைப்பை உள்நோக்கி கருவி போன்றவற்றை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை பல்வேறு உயர் சிகிச்சை உபகரணங்கள் கொண்டு செயல்பட்டு வருவருகிது.
இங்கு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ள நிலையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ அதிநவீன இயந்திரம் தமிழ்நாட்டில் முதல் முறையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் கூட இது இல்லை.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இந்த ஆட்சியில்தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதய ஆபரேஷன், உறுப்பு மாற்று ஆபரேஷன் போன்றவை இங்கு அதிகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நாள்தோறும் 2,000 நோயாளிகள் வருகின்றனர். ஓமந்தூரார் மருத்துவமனை எந்த காலத்திலும் தலைமைச் செயலகமாக மாறாது. இதனை எடப்பாடி பழனிச்சாமியிடம் தைரியமாகச் சொல்லலாம் என்றார்.