இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மணாலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குலு மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
கடந்த 15 நாட்களாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மணாலியில் சுமார் 9 கட்டிடங்கள் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சிம்லா உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சிம்லா அதிக பாதிப்படைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெறுகின்றன.
கனமழை தொடந்து நீடித்து வரும் நிலையில் இமாச்சலப்பிரதேச அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல ஒன்றிய அரசும் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அனுப்பி வருகிறது.