சென்னை: உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 12,037 பேர் எழுதுகின்றனர். இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.
முதல்நிலை தேர்வு 32 தேர்வு மையங்கள், 43 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 42 தலைமை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை 4044 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 13 மையங்களில் 14 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.