ஒரு காலத்தில் திருட்டுத்தனமாக ‘தம்’ அடித்த காலம் இப்போது மலையேறிவிட்டது. பீடி, சிகரெட் பிடிக்கும் காலம் போய்விட்டது. இப்போது கஞ்சா, பிரவுன் சுகர், எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப் பொருட்கள் மிக எளிதில் கிடைப்பதால் அதைத்தான் பெரும்பாலான இளைஞர்களும், இளம்பெண்களும் பயன்படுத்துகின்றனர். தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும் நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த இதுபோன்ற போதைப் பொருட்கள் தற்போது குக்கிராமங்களில் கூட கிடைக்கிறது. போதைக்கு அடிமையாகும் இவர்கள் சுய நினைவின்றி தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத வகையில் நடந்து கொள்கின்றனர். இந்நிலையில் கேரள, கர்நாடக மாநில எல்லையிலுள்ள ஒரு வயல்வெளியில் வாலிபர்களும், இளம்பெண்களும் கஞ்சா போதையில் உருண்டு புரளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வயல்வெளியில் போதையில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த அவர்களை அந்தப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கண்டித்தனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத அந்த இளம்பெண்கள் ஊர் மக்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்தனர். உடனே அந்த இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் முழு போதையில் இருந்ததால் ஒரு சில இளம்பெண்கள் ஓட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தனர். நீண்ட நேரம் அங்கிருந்தால் சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்த அவர்களுடன் வந்த வாலிபர்கள் கீழே விழுந்த இளம்பெண்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.