நெல்லை: திசையன்விளை அருகே கடலில் குளித்தபோது உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி வழங்கியுள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலில் குளித்த ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உவரி அருகே கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியான 3 மாணவர்கள் உடல் இன்று மீட்கப்பட்டது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த உவரி அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் மகன் முகேஷ் (13), இசக்கியப்பன் மகன் ராகுல் (14), செல்வராஜ் மகன் ஆகாஷ் (14). இவர்கள் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். விடுமுறை தினமான நேற்று மாலை, இந்த 3 பேர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வன் மகன் பிரகாஷ் ஆகியோர் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அங்கு, முகேஷ், ராகுல், ஆகாஷ் ஆகியோர் கடலில் குளித்தனர். பிரகாஷ் மட்டும் கடற்கரையில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். 3 பேரும் கடலில் ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த கடல் அலையில் சிக்கி 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கிராமத்துக்கு ஓடி சென்று நடந்தவற்றை தெரிவித்தார். உடனே 3 பேரின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கூச்சலிட்டபடி கடற்கரைக்கு ஓடினர்.
தகவலறிந்து கடலோர காவல் குழுமம், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சபாநாயகர் அப்பாவும் விரைந்தார். மீட்பு பணியை முடுக்கி விட்டு மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இரவு நேரம் என்பதால் மீட்பு பணி தடைபட்டது. மாணவர்கள் கதி என்ன? என்பது தெரியாமல் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், கடற்கரை பகுதியில் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோடாவிளை கடற்கரை பகுதியில் 2 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியது. மற்றொரு மாணவர் உடல், காலை 7 மணியளவில் காரிகோவில் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. 3 உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தன. 3 மாணவர்கள் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த பெற்றோர்களுக்கும் இரங்கலையும், அவர்களது ஆறுதலையும் எனது தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.