சென்னை: சொந்த ஊர் செல்ல வேண்டி தாம்பரத்தில் இருந்து எழும்பூர் செல்லும் புறநகர் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரிடம் 37 சவரன் நகைகள் கொண்ட பையை திருடிய குற்றவாளியை ரயில்வே போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்தனர். மயிலாடுதுறையை சேர்ந்தவர் வெங்கடேசன்(54). இவர் தற்போது புதுதில்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்ல கடந்த 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சோழன் விரைவு வண்டியை பிடிக்க புறநகர் ரயிலில் பயணம் செய்தார். எழும்பூர் ரயில் நிலையம் வந்த பிறகு தனது உடமைகளை சோதனை செய்த போது, அதில் 37 சவரன் மதிப்புள்ள நகைகள் வைத்திருந்த பை மட்டும் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரயில்வே எஸ்பி பொன்ராமு உத்தரவுப்படி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தாம்பரம் முதல் பீச் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, பழைய குற்றவாளியான தாம்பம் இரும்புலியூர் எரிக்கரை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு(46) என தெரியவந்தது.
தனிப்படை போலீசார் பாபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 37 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை ரயில்வே எஸ்பி பொன்ராமு வெகுமதி வழங்கி பாராட்டினார்.