சென்னை: வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே தான் வாழ்க்கை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை செய்த நிலையில், அவரது தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நன்கு படித்து போதிய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் பணம் இல்லாவிட்டால் மருத்துவம் படிக்க வழியில்லாத நிலையில், மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரை பறிகொடுத்த சோகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், நீட் தேர்வில் தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருப்பது வேதனையளிக்கிறது. நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.க. முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையேயான பயணம் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்வது எதற்கும் தீர்வாகாது. அதே நேரத்தில், தோல்வியை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிப் படிகளைச் சுலபமாக அணுகமுடியும் என்பதையும் மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.