திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக மாநராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள ஐந்து கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் நான்கு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைகளிலிருந்து 100 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார துறை அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையத்தில் புகை பிடித்த 14 நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.