சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசிடம் இருந்து இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை காவிரி நடுவர் மன்றம் தீர்மானித்திருக்கிறது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்பது கூட்டாட்சி தத்துவத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் திறந்து விடவில்லை என்றால், அதனால் தமிழக அரசுக்கும், உழவர்களுக்கும் ஏற்படும் இழப்பை கர்நாடகத்திடமிருந்து வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க ஆணையிட வேண்டும்; கர்நாடகம் தண்ணீர் திறக்கும் வரை காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கும், மின்னுற்பத்தி இழப்பால் தமிழக அரசுக்கும் ஏற்பட்ட இழப்புகளை கர்நாடகத்திடமிருந்து வசூலித்துத் தர வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக அந்த வழக்குகளை தொடர வேண்டும்.