சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் அங்குமிங்கும் நடமாடியது. அப்போது, சாலையில் சென்ற அரசு பேருந்து உள்ளிட்ட மற்ற வாகனங்கள் காட்டு யானை நடமாட்டத்தால் தொடர்ந்து சாலையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
குட்டியுடன் காட்டு யானை நடமாடுவதை கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். ஒரு சில பயணிகள் காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதை செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்த படி நடமாடிய காட்டு யானை குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பகல் நேரங்களில் சாலையில் காட்டு யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.