பழநி, ஆக. 11: பழநி அருகே ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி திட்டம் மூலம் தீவனப் பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி மற்றும் செயல்விளக்கக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமை வகித்தார். இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன் வரவேற்றார். முகாமில் ஆடு, மாடு வளர்ப்பிற்கு ஏற்ற பசுந்தீவனப்பயிர்களான கம்பு, நேப்பியர் தீவன ஒட்டுப்புல், வேலிமசால், மறுதாம்பு, தீவனச்சோளம் மற்றும் அகத்தி ஆகியவற்றின் சாகுபடி முறைகள் மற்றும் அதிலுள்ள சத்துக்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பில் கிடைக்கும் வருமானங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இதையடுத்து, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முகாமில் விவசாயிகளுக்கு தீவனப்பயிர் விதைகள், கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு கலவை, தாது உப்புக்கட்டி ஆகியவை வழங்கப்பட்டது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி வேளாண் அலுவலர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.