Saturday, October 5, 2024
Home » ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!

ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

களைச்செடி, வேலிப்பயிர் என அலட்சியமாகப் பார்க்கப்படும் பல தாவரங்கள் அசாத்தியமான மருத்துவக் குணமிக்க மூலிகைகள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிபட்ட அற்புதமான மூலிகைகளில் ஒன்று ஆடாதொடை. இது அதீத கசப்புடன் இருக்கும். பார்ப்பதற்கு கொஞ்சம் நுணா மற்றும் மா இலைபோல இருக்கும். இந்த மூலிகையை ஆடு தின்னாது என்பதால், இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கக்கூடும்.

“ஆடாதொடையினால் பாடாத நாவும் பாடும், நாடாது வியாதி தானும்” எனச் சித்தர்கள் சிலாகித்துப் பாடியுள்ளனர். அந்தளவிற்கு இந்த மூலிகை, நம் வாழ்வில் சந்திக்கும் பல வியாதிகளுக்கு எளிய மருந்தாகிறது. சளி நிறைய சேர்ந்து இரவு முழுவதும் இருமும் குழந்தைகளுக்கு இரண்டு மூன்று ஆடாதொடை இலைகளைக் குறுக்கே கிழித்து, இரண்டு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி கஷாயத்தை கொடுக்க, சளி வெளியேறி இருமல் நிற்கும்.

ஆஸ்துமா பிரச்னையால் சரியாக மூச்சுவிட முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள் ஆடாதொடை இலையை நான்கு பங்கு நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வர ஆஸ்துமா கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் குடித்து வந்தால் காசநோய் கட்டுப்படும். மழைக்காலத்தில் இந்தக் கஷாயத்தை தயாரித்து குடித்தால் சளித்தொந்தரவு அண்டாது.

வயிற்றில் உப்பு சத்துடன் கூடிய இரைப்பு நோய், அத்தோடு சளியும் சுரமும் இருந்தால் ஆடாதொடை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக்கிக் கொடுக்க உப்புசமும் இரைப்பும் உடனடியாகக் குறையும். சளி கட்டி, குரல் கம்மலாக கரகரப்புடன் இருக்கும்போது ஆடாதொடை, அதிமதுரத் துண்டு, நான்கு மிளகு சேர்த்து கஷாயமாக்கிக் கொடுக்க கரகரப்பு நீங்கி, இயல்பான குரல் கிடைக்கும். தொண்டையின் உட்பகுதியில் ஒட்டியிருக்கும் சளி வெளியேறும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பலருக்கும் இப்படித் தொண்டையின் உட்பகுதியில் சளி ஒட்டி, அதை வெளியேற்ற அடிக்கடி செருமும் பழக்கம் இருக்கும். அப்படி ஒட்டியுள்ள சளியை வெளியேற்ற இந்தக் கஷாயம் மிக அற்புதமான மருந்து.ஆடாதொடையில் உள்ள வாலிஸின் சத்துதான் இந்த மூலிகையின் சளியை வெளியேற்றுவது. நுரையீரலில் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவது, ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை சரியாக்குவது முதலான பல செய்கைகளுக்குப் பின்னணியில் உள்ளது.

ஆடாதொடை இலைச்சாறு ரத்தகழிச்சல், சீதமும் ரத்தமும் கலந்துண்டாகும் கழிச்சல் இவைகளுக்கு நன்மை தரும்.இதன் இலையை அரைத்துச் செய்யும் உருண்டை மாதவிடாய் சமயம் பெண்களைப் பெரிதும் வாட்டும் அதிக ரத்தப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்தும்.

தொகுப்பு : இரா. அருண்குமார்

You may also like

Leave a Comment

19 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi