திருவனந்தபுரம்:கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாவலிக்கரையில் கார் வெடித்து தீ பிடித்ததில் வாலிபர் உடல் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (35). அந்த பகுதியில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று வெளியூர் சென்றிருந்தவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது காரை வீட்டுக்கு அருகே நிறுத்த முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. காருக்குள் இருந்த கிருஷ்ண பிரகாஷ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அறிந்த மாவேலிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ண பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார் தீ பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.