மதுரை: மதுரையில் அண்ணாமலை நடைபயணத்தின் போது அடிதடி, தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை 9வது நாளாக நேற்று மதுரை நகரில் நடைபயணத்தை மேற்கொண்டார். காலையில் ஒத்தக்கடை, செல்லூர் பகுதியில் நடைபயணத்தை முடித்து மாலையில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி சாலை வழியாக பாதயாத்திரையாக சென்ற போது முருகன் கோயில் அருகே 4க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை உரிய பாதுகாப்பின்றி அண்ணாமலை முன்பாக அழைத்து வந்ததனர். அப்போது காளைகள், கூட்டத்தை பார்த்து அங்குமிங்கும் ஓடியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து ஜான்சிராணி பூங்கா அருகே நடைபயணம் வந்த போது, தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், அண்ணாமலையை சந்தித்த போது அக்கட்சியை சேர்ந்தவர்கள், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. திருமாறன் ஆதரவாளர்களை பாஜவினர் தடுத்ததால் ஒருவரையொருவர் தாக்க துவங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கடுப்பான ஆதீனம்: மதுரை தெற்கு ஆவணி வீதி பகுதியில் அண்ணாமலை நடைபயணம் வந்த போது, மதுரை ஆதீனத்தை சந்திக்க வருகிறார் என கூறி பாஜவினர் மடத்திற்கு முன்பாக காத்திருந்தனர். இதையடுத்து ஆதீனம், மடத்தின் உள்ளே அண்ணாமலைக்காக காத்திருந்தார். ஆனால் அண்ணாமலை திடீரென கண்டுகொள்ளாமல் அப்பகுதியை கடந்து சென்றார். இந்த தகவலை ஆதீனத்திடம் கூறிய நிலையில் அவர் கடுப்பாகி மடத்திற்குள் சென்றார்.