மதுரை, ஆக. 5: கஞ்சா பறிமுதல் வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டையை சேர்ந்த செந்தில் (38), தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்த கந்தசாமி (45) ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள மாதவகுறிச்சி விலக்கு பகுதியில் பிரித்து விற்பனை செய்வதற்காக தனித்தனியாக கொண்டு சென்ற போது கடந்த 20.7.2020ல் மானூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.