திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி (28). இவருக்கும் மேகனாந்தன் தனியார் கம்பெனி ஊழியர். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி குடும்பத்துடன் சென்னை பாரிமுனையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு காவியா (5) என்ற பெண் குழந்தையும், ஹேமபிரியா என்ற 2 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில், 2வது குழந்தை பிரசவத்திற்காக ரேவதி, திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு ரேவதிக்கும் அவரது தாயார் கவிதாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் மனமுடைந்த ரேவதி தனது குழந்தைகளுடன் அங்குள்ள பைப்பாஸ் சாலை அருகே உள்ள ஒரு வயல்வெளி கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு தானும் கிணற்றில் குதித்துள்ளார்.
சத்தம்கேட்டு அவ்வழியே சென்றவர்கள் பார்த்து கிணற்றில் இறங்கி, ரேவதியை மட்டும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ரேவதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்றுப் பார்த்து திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினரை வரவழைத்து கிணற்றில் வீசப்பட்ட இரு குழந்தைகளையும் தேடினர். காவியாவை சடலமாக மீட்டனர். மேலும் கிணற்றுக்குள் மூழ்கிய 2 மாத குழந்தையை தேடுகின்றனர். இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து கிணற்றில் இறங்கி குழந்தையை தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.