தஞ்சாவூர், ஆக. 3: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள், சேமிப்பு கிடங்குகளில் இருந்து 3,000 டன் நெல் கும்பகோணம், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் கும்பகோணத்திலிருந்து இருந்து திருப்பூருக்கு 2000 டன் நெல் 42 வேகன்களில், பட்டுக்கோட்டையில் இருந்து தென்காசிக்கு 1000 டன் நெல் 21 வேகன்களில் அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.