திருவள்ளூர் : கடலூர் மாவட்டம் முத்துநகர் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வள்ளி (60). இவர் கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள அம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அங்கு, நள்ளிரவு 3 மணி அளவில் சாமிதரிசனம் செய்துவிட்டு பெரியபாளையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் கூழ் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான், கழுத்தில் இருந்த 3 சவரன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதனால் மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.