சென்னை: மணிப்பூர் மாநில மக்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் கண்ணதாசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் அழகேசன் ஆர்ப்பட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களை பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நாடாளுமன்றத்தில் பிரதமர் வருகை தந்து மணிப்பூர் மாநிலத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏழுமலை, தேசியக்குழு உறுப்பினர் வகிதாநிஜாம், ஏஐடியுசி தென்சென்னை மாவட்டச் செயலாளர் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.