பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் தம்பி ராமய்யா, புலவர் ராமலிங்கம், கவிஞர் கவிதா ஜவகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் நடிகர் தம்பி ராமய்யா பேசியதா வது;
உலகத்திலேயே 5 தலைமுறை தலைவர்களை கண்ட தலைவர் கலைஞர் தவிர எவரும் இல்லை. எதிரிகளையும் தன்வசப்படுத்துவதில் ஆற்றல் கொண்டவர் கலைஞர். எழுத்து, இயக்கம், குடும்பம், அரசு நிர்வாகம் என அனைத்தையும் ஒருசேர வழிநடத்தி செல்வதில் வல்லவர் கலைஞர். கலைஞர் நூற்றாண்டு விழாவில் அவரது புகழ்பாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் கவிதா ஜவகர் பேசும்போது, “உலக சரித்திரத்தில் பேசவும் செய்த செயலாற்றவும் செய்த ஒரே தலைவர் கலைஞர். அடுத்த தேர்தல்களை மட்டுமே நம்பி செயல்பட்டுவரும் அரசியல் தலைவர்களில் அடுத்த தலைமுறையை எண்ணி செயல்பட்டவர் கலைஞர்” என்றார். புலவர் ராமலிங்கம் பேசுகையில், “கலைஞருக்கு சமூகநீதியை தவிர்த்து வேறெந்த சிந்தனையும் இல்லை. தன் வாழ்நாள் துவங்கி இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்த ஒரு இமயம் கலைஞர்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், எழும்பூர் வடக்கு பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சொ.வேலு, மேயர் பிரியா, எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் சுதாகர், மாவட்ட பகுதி கழக வட்ட கழக, அனைத்து அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.