தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியின்போது காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 40வது வார்டில் உள்ள இளைய முதலி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் உள்ளது. குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர் திடீரென கீழே சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காவலர் குடியிருப்பு சார்பில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீண்டும் சுற்றுச்சுவர் கட்டித் தருவது குறித்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.