டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் சமர்ப்பித்தது. மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது. மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் கவுரவ் கோகோய் வழங்கினார். காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் 4நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்து மோடி பேச மறுப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பேச வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் 50 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த உடன் தீர்மானம் விவாதத்துக்கு பட்டியலிடப்படும்.
மக்களவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதித்து நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்துக்கான தேதி முடிவு செய்யப்படும். மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர கொறடா உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் மக்களவையில் இன்று தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் விவரத்தை சபாநாயகர் அறிந்து கொள்வார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காத நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வருகிறது.