கோவை, ஜூலை 26: மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இடஒதுக்கீடு சம்பந்தமாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தில், பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாஜ அரசு தான் என கூறி அங்குள்ள பல்வேறு பாஜகவினரின் இல்லங்களும் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை ஆண்கள் வலுகட்டாயமாக நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து சென்ற வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் நேற்று ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் தங்களின் குழந்தைகளுடன் பங்கேற்றனர். அவர்கள், மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அம்மாநில முதல்வரிடம் இருந்து மணிப்பூரை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.